Pages

Wednesday, January 4, 2012

நதியில் தவறிய துளி - 6


தொடர்ச்சி...
எனது தோள்கள் 
பூக்குவியல்களால் ஆனதில்லையே
முதன்முதலாக  வருந்தினேன்...

அவளின்  இதயம்
துடித்துக்கொண்டிருந்தது
என்பதைவிட

என் முதுகு துளைத்து
என்னிதயத்தொடு பேசிக்கொண்டிருந்தது
என்பதுதான் உண்மை

என்னவொரு
மென்மையான இசைக்கற்றை
சுகந்தமான தாளகதி...

பாடலுக்கு
இசையமைக்க
கருவிகள் தேவையில்லை,

முதுகில்
அதுவும் பயணத்தில்
விழிகளால் ஓய்வெடுக்கும்
காதலியின் இதயம் ஒன்றே
போதுமென்று புரியுங்கள்
இசைக்கலைஞர்களே ...

அவளின் மூச்சுக்காற்று
எந்தெந்த தீக்களாலோ
காயம்பட்டிருந்த என்னுயிருக்கு 
மருந்து பூசிக்கொண்டிருப்பதாகவே
எனக்குத் தெரிந்தது

இனி
எப்போதெல்லாம்
அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாளோ
நான் விழித்திருக்க வேண்டும்.,

.......................
........
.................

நல்லவேளையாக
என் கனவில் நாங்கள்
போய்க்கொண்டிருக்கும்போதே 
நான்
விழித்துக்கொண்டேன் !

அந்தக் கனவைக்
கண்டநாள் முதல்
தினமும் அதே சூழல்களோடு
உறங்கச் செல்கிறேன்

ஆனால்
ஒருமுறை போனால்
திரும்பாத உயிரைப்போல
அந்தக் கனவும்
அதன்பிறகு வரவேயில்லை...

ஆனாலும்
அதுமுதல் நான்
கனவு வாழ்க்கை மட்டுமே
பிடித்துப்போன
உயிரினமாகிப்போனேன் 

ஆனால்
அந்தக் கனவு மாளிகையின் அடியில்
மூச்சுத் திணறிக்கொண்டிருந்தன
என் நிஜங்கள்...

ஆடைகள் நனையக்கூடாதென்றால்
அலைச் சுகம் கிடைக்காதென்று
எனக்குத் தெரிந்தது 
அவளுக்குத் தெரியவில்லை

என் வாழ்க்கைக்கு
அவள் வேண்டுமென்பது
நல்ல விதைகள் 
பூமி பிளப்பது போல எளிது

அது போலவே
அவளும் நினைப்பதென்பது
முளைத்தச் செடிகள் எல்லாமும் 
பூப்பதைப்  போல அரிது

ஆனால்
இந்த எளிதையும்   அறிதையும்  
என்
கனவுகளோ நினைவுகளோ
புரிந்திருக்கவில்லை

நான்
அவளை
சுவாசத்தை நுரையீரல் போன்று
நிறையக் காதலித்தேன்

அவளைக் காணத்தான்
செடிகளுக்கு
கண்கள்
பூக்களாக மலர்கிறது
என்று சுகித்திருந்தேன்...

ஏனெனில் 
அதுவரை எனக்கு
பாலைவனமும்
கானலும் மட்டுமே
பரிச்சயமாய் இருந்தது

மாற்றினாள்
என்னை
நந்தவனங்களின் நளினங்களில்
புதைந்து போகச் செய்தாள்

இப்போதெல்லாம் 
காதல் நிகழ்கிறது
ஒன்று வாழ்க்கைக்கு வெளியே
அல்லது வாழ்வைத் தொலைத்து...

ஆனால்
நான் முகம் 
எனக்கு
காதல் ஒரு விழி
வாழ்க்கை ஒரு விழி

நான் குருதி
காதல் 
நிறமிகள் எனக்கு

( தொடர்வோம் )... 

3 comments:

  1. காதலின் வேதனை முன்னிலும் அதிகரிக்க அவளுள் இருக்கும் காதலை வெளிக்கொணரத் துடிக்கிறது மனம். அழகாய் தொடர்கிறது காதல் சுவடுகளில் கவிதைப் பயணம்.

    ReplyDelete
  2. கனவுக்காதல் தண்டில் பூக்கிறது தொடரும் உண்மைக் காதல்.அவள் புரிந்துகொள்ளும்வரை கொஞ்சம் கவலைதான்.ஆனாலும் காத்திருப்போம் !

    ReplyDelete
  3. மகிழ்ச்சி நன்றிகள்
    -இயற்கைசிவம்

    ReplyDelete